உள்ளூர் செய்திகள்

கோவையில் கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

Published On 2023-03-29 09:06 GMT   |   Update On 2023-03-29 09:06 GMT
  • வினோதினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
  • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் கோகுல் பிராசாந்த். இவரது மனைவி வினோதினி(வயது20). நிறைமாத கர்ப்பிணியான வினோதினிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மிகுந்த வலியுடன் அவர் துடித்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஊழியர்களுடன் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அப்போது குழந்தையின் தலை வெளியே வந்து இருந்தது.

இதனால் அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ், பைலட் நந்த கோபால் உதவியுடன் வீட்டில் வைத்து வினோதினிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தாயும்-சேயும் இருவரையும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News