உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் இடம்பெற்ற நாய்கள்.

கொடைக்கானலில் இன்று 2-வது நாளாக அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி

Published On 2023-02-26 10:16 IST   |   Update On 2023-02-26 10:16:00 IST
  • நாய் கண்காட்சியில் 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.
  • 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள், சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

கொடைக்கானல்:

மெட்ராஸ் கெனல் கிளப்பின் 137 மற்றும் 138 ஆம் ஆண்டு, சேலம் கெனல் கிளப்பின் 25 மற்றும் 26 வது ஆண்டு, கொடைக்கானல் கெனல் அசோசியேஷனின் 7 மற்றும் 8-ம் ஆண்டு நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா புதுடெல்லி, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாக்ரஸ்ஸல் டெரியர், பேஷன்சி, அமெரிக்கன்ஸ்டாப்பட் டெரியர், கெயின் கார்சோ, புல்டாக், பர்னிஷ் பவுண்டன், கார்டன் ஹெட்டர், பேஷன் ஃபிரீஷ் ஆஸ்திரேலியா செப்பர்டு, உட்பட தமிழக வகைகளான ஜெர்மன் ஷெப்பர்ட் கிரேட்டன், அஸ்கர், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதூர்கவுண்ட் உட்பட 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.

அதில் எஜமானர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிதல், அதன் மோப்ப சக்தி, அவைகளின் உடல் அமைப்பு, அதன் வேகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்ற நாய்களுக்கு சுழற் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இன்றும் கண்காட்சியில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.

போட்டியின் முடிவில் சிறந்த நாய்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மெட்ராஸ் கெனல்கிளப்பின் தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். செயலாளர் சித்தார்த் முன்னிலை வைத்தார். கொடைக்கானல் கெனல் கிளப்பை சேர்ந்த ஜெய்ஹிந்த் ஜெய்கேஸ் ஜெயதிலகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

இந்த போட்டிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் மெட்ராஸ் கெனல் கிளப் 142 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது இதில் 86 உப கிளப்புகள் உள்ளன. இதன் மூலமாக 138 வது ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளின் நடுவர்களாக செர்பியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் இந்தியாவைச்சேர்ந்த ஆறு பேர் நடுவர்களாக உள்ளனர். ஞாபக சக்தி, துப்பறியும் திறன், குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெற்று முடித்தவுடன் சிறந்த நாய்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன என்றனர்.

நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தனக்கு சொந்தமான டேசன்ட் ஹஸ்கி, டாபர்மேன், கிரேட்டன், ராஜபாளையம் உள்பட ஏழு உயர்ரக நாய்களுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News