உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி- கோவையில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2022-09-28 10:02 GMT   |   Update On 2022-09-28 10:02 GMT
  • ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

கோவை

பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ் இயக்கப்படும்.

இந்த ஆண்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை அவ்வப்போது முகூர்த்த நாட்கள் இருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது. பின்னர் கடந்த 2 வாரமாக பஸ் நிலையத்தில் கூட்டம் குறைவால், வெளியூர் பஸ்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதற்கிடையே, வரும் 30-ந் தேதியுடன் பள்ளி அரையாண்டு தேர்வு நிறைவடைந்து அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி விடுமுறையும் அதன்தொடர்ந்து 4 மற்றும் 5-ந் தேதிகளில் சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறைகள் இருப்பதால், வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் 30-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து 5 நாட்களும், வழக்கம்போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 35 பஸ்கள் சிறப்பு பஸ்களாக கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வால்பாறையில் வசிக்கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றுவதால், சரஸ்வதி பூஜையையொட்டி வால்பாறைக்கு அக்டோபர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், வெகுதூர பகுதிகளுக்கும் என தினமும் 190 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெகுதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

விசேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 30-ந் தேதி வரை பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறையாக இருந்தாலும், சரஸ்வதி பூஜை பண்டிகை இருப்பதால், பெரும்பாலானோர் குடும்ப த்துடன் வெளியூர்களுக்கு செல்வர்.

இதனால், வெளியூர்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த முறை சரஸ்வதி பூஜை மற்றும் பள்ளி விடுமுறை என்பதால், 35 பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதேபோன்று கோவையில் இருந்தும் நெல்லை, தென்காசி மதுரை, சேலம், ஊட்டி, உள்பட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.  

Tags:    

Similar News