உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரிக்கை

Published On 2022-06-15 07:43 GMT   |   Update On 2022-06-15 07:43 GMT
  • அனுமதிக்கப்பட்ட அளவு உரங்கள் மட்டுமே வழங்கபடும்.
  • விதிகளை மீறினால் உரங்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும்.

தாராபுரம் :

தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள உரக்கடை உரிமையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் கி.லீலாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனையாளர் தங்களின் விற்பனைக்கான புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட வேணடும். மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்கும் போது விவசாயிகளிடம் ஆதார் எண் கேட்டு வாங்க வேண்டும். பிறகு தான் உரம் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை விற்க வேண்டும். ஒரே நபருக்கு அதிக உரங்களை விற்பனை செய்ய கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு உரங்கள் மட்டுமே வழங்கபடும்.

மேலும் உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்பவர்கள் கட்டாயம் விற்பனை ரசீது வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் தவறாது விற்பனை ரசீதுகளை கேட்டு பெறவும். உரக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் அனுமதிக்கப்பட்ட உரம், பூச்சிமருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தங்களின் விற்பனை உரிமம், விலை விவரங்களை அனைவரும் காணும்படி வைக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்பவர்கள் அனுமதி பெறாத நிறுவனங்களில் உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது.

மொத்த விற்பனையாளர் உரங்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யவோ மாற்றம் செய்யவோ கூடாது. சில்லரை விற்பனையாளர்களுக்கு உரங்களை அளிக்கும் போது முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்ப வேண்டும். மீறினால் அத்தகைய உரங்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு தேவையான பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் பரிந்துரைக்கபட்ட உரம் பூச்சிமருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

உரக்கடை உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை மற்றும் விவசாயி அல்லாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டால் உரகட்டுபாட்டு ஆணை1985-ன்படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News