வத்தல்மலையில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் கலெக்டர் சாந்தி. உள்ளார்.
ரூ.2.23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா அமைக்கும் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை
- வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாப்பணிகள் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- சுற்றுலாத்துறை அமைச்சர் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இவ்விழா வில் சுற்றுலாத்துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, திட்ட விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவானது நேற்று தொடங்கி நாளை 4.8.2023 வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.
இவ்விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தருமபுரி மாவட்ட ஒகேனக்கல் சுற்றுலாதலத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து காவிரி ஆற்றினை பார்த்துவிட்டு மக்கள் செல்கின்றனர். மேலும், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை ரூ.17.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டுமென இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரியில் சுற்றுலாவை மேம்படுத்த வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாப்பணிகள் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுபோன்ற பல்வேறு சுற்றுலா திட்டப்பணிகளால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், தனி மனித வருமானம் அதிகரிப்பதோடு, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையும். மக்கள் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு நல்ல ஆதரவு அளித்து, சுற்றுலாத்த்துறையை வளர்த்து எடுக்க வேண்டும்.
மேலும், இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் ஏறத்தாழ 77 பயனாளிகளுக்கு ரூ.72.10 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, வத்தல்மலையில் அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.