தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
- முன்னெச்சரிக்கை சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.
- தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவரும் இணைந்து ஒத்துழைப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தேசிய தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழுநோய் பரவும் விதம், தடுக்கும் வழிமுறை, தேவையான முன்னெச்சரிக்கை சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது. தொழுநோய் விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் வரைந்திருந்தனர்.
தோல்நோய் தடுப்பு பிரிவு பேராசிரியர் பாரதி மற்றும் சுமதி வரவேற்றனர். மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் தலைமை வகித்தார். இருப்பிட மருத்துவ அலுவலர் லட்சுமணன், உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ கல்லூரி மாணவர், செவிலியர், தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் காற்றின் மூலம் பரவுகிறது. உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல் நோய் உள்ளவர்களையோ அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர் எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால், உடனே அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கான ஏற்பாடு செய்வேன். அவர்களை அன்பாக என குடும்ப உறுப்பினர் போலவும், வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன். தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவரும் இணைந்து ஒத்துழைப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், பயிற்சி டாக்டர் மற்றும் செவிலியர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.