உள்ளூர் செய்திகள்

விநாயகருக்கு விடியவிடிய தேன் அபிஷேகம் நடந்து.

பிரளயம்காத்த விநாயகருக்கு விடியவிடிய தேன் அபிஷேகம்

Published On 2022-09-01 09:50 GMT   |   Update On 2022-09-01 09:50 GMT
  • இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறும்.
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்துக்காக தேன் வழங்கினர். தேன் அபிஷேகம் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய நடைபெற்றது.

சுவாமிமலை:

சுவாமிமலை அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்றது.

திருப்புறம்பியத்தில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான சாட்சிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தனி சன்னதியில் தேனபிஷேக பெருமான் என்று அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.

பிரளயம் காத்த விநாயகர் நத்தைக் கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல் பொருட்களால் உருவான மேனியைக் கொண்டவர்.

வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது.

நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 6:30 மணிக்கு தேன் அபிஷேகம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்துக்காக தேன் வழங்கினர்.

தேன் அபிஷேகம் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய நடைபெற்றது.

அபிஷேகத்தின்போது, விநாயகர் மீது ஊற்றப்படும் தேன் முழுவதும் அவரது திருமேனியின் உள்ளே உறிஞ்சப்பட்டு, சிலை சிறிது சிறிதாக தேன் நிறத்துக்கு மாறியது.

தேன் அபிஷேகம் நிறைவடைந்தபோது, பிரளயம் காத்த விநாயகர் செம்பவள மேனியராக காட்சியளித்தார்.

இந்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News