உள்ளூர் செய்திகள்

முட்புதர்களால் சூழ்ந்துள்ள பழைய ஆதார் மையத்தை படத்தில் காணலாம்.

நிலக்கோட்டையில் ஆதார் மையத்தை சூழ்ந்துள்ள முட்புதர்களால் ஆபத்து

Published On 2023-10-09 11:18 IST   |   Update On 2023-10-09 11:18:00 IST
  • முட்புதர்களால் சூழப்பட்டுள்ள ஆதார் மையத்தை ஒட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் மகளிர் சிறைச்சாலை உள்ளது.
  • இப்பகுதி முட்புதர்கள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறுவதால் விஷ பூச்சிகள் அதிக அளவு உலா வரும் இடமாகவும் உள்ளது.

நிலக்கோட்டை, அக்.9-

நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையம் திடீரென மூடப்பட்டது. அப்போதிருந்து இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் ஆதார் மையம் முழுவதும் தற்போது முட்புதர்களால் சூழ்ந்துள்ளது.

இதனால் தற்சமயம் ஆதார் மையம் வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த முட்புதர்களால் சூழப்பட்டுள்ள ஆதார் மையத்தை ஒட்டி வருவாய்த்துறை அலுவலகம், பழைய தாலுகா அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் மகளிர் சிறைச்சாலை உள்ளது.

இப்பகுதி முட்புதர்கள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறுவதால் விஷ பூச்சிகள் அதிக அளவு உலா வரும் இடமாகவும், தொற்று நோய் உற்பத்தி செய்யும் மையமாகவும் மாறி உள்ளது. எனவே இங்குள்ள முட்புதர்களையும், குப்பைகளையும் அகற்றி பாதுகாப்பான இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News