உள்ளூர் செய்திகள்

16 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திய வாலிபர்

Published On 2022-08-03 09:25 GMT   |   Update On 2022-08-03 09:25 GMT
  • மிஸ்டு கால் மூலமாக வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
  • 2 பேரும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

கோவை:

கோவை கருமத்தம்பட்டி யை சேர்ந்த 16 வயது சிறுமி. இவருக்கு மிஸ்டு கால் மூலமாக நெல்லையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

கடந்த மாதம் 23-ந் தேதி கோவைக்கு வந்த ஈஸ்வரன் திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவருடன் திருச்செந்தூரில் வசித்து வந்தார். சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஈஸ்வரன் சிறுமியை கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். சிறுமியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.

அப்போது மைனர் பெண் என்று தெரிந்து அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்ற ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News