உள்ளூர் செய்திகள்

ரூ.10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஆம்னி பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சிக்கிய வாலிபர்

Published On 2023-02-25 07:14 GMT   |   Update On 2023-02-25 07:14 GMT
  • ரூபன் சென்னையில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார்.
  • சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை.

கயத்தாறு:

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரூபன்(வயது 42). இவர் மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி வைத்து நடத்தி வருகிறார். ேமலும் சென்னையில் கியாஸ் நிறுவன வினியோகஸ்தராகவும் உள்ளார்.

ரூ.10 லட்சம்

ரூபன் சென்னையில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார். அதை மீட்பதற்காக ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பணத்தை ஒரு பையில் போட்டு அதை பஸ்சில் பயணிகள் பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் ரூபன் வைத்திருந்தார்.

அந்த பஸ் இரவு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன் நின்றது. அதில் இருந்த ரூபன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலில் டீ சாப்பிட்டார். அப்போது பணம் இருந்த பைைய பஸ்சிலேயே வைத்து விட்டு வந்திருந்தார்.

பணப்பை திருட்டு

சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. மர்ம நபர் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் வாங்கப்பட்டது.

அந்த புதிய பஸ்சில் 6 சி.சி.டி.வி.காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்து பார்த்தபோது, அதே பஸ்சில் பயணம் செய்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பணப்பையை லாவகமாக எடுத்துக்கொண்டு தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

தனிப்படை விரைவு

அதனைவைத்து பஸ் கண்ட்ரக்டரிடம் இருந்த பயணிகளின் முகவரியை சோதனை செய்தபோது அந்த நபரின் செல்போன் எண் கிடைத்தது. அதனை வைத்து சிக்னல் மூலமாக போலீசார் ஆய்வு செய்தபோது பணப்பையை திருடிக்கொண்டு அந்த வாலிபர் திருவாரூரை நோக்கி தப்பிச்செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடிக்க அங்கு தனிப்படை விரைந்துள்ளது.


Tags:    

Similar News