தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தார்சாலை போடப்பட்டது
- அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
- பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேராவூரணி:
பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் பழமையான பூனைகுத்தி காட்டாற்று பாலம் உள்ளது. மழை காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும்.
இதனால் அங்கு உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து அங்கு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
அந்த மாற்றுப்பாதை வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், இந்த மாற்றுப்பாதை ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் செல்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உடனடியாக அந்த பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 2-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தற்போது அந்த பழுதடைந்த சாலையில் தார்சாலை போடப்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில் தார்சாலை அமைத்து தந்த அதிகாரிகளை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாய் பாராட்டினர்.