உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே 40 அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த மாணவன் சாவு

Published On 2023-07-01 08:49 GMT   |   Update On 2023-07-01 08:49 GMT
  • இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
  • மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ராமநாதன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவரது மகன் ஹரிகரன் (13) சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். ராமநாதன்குப்பம் பகுதியில் சுமார் 40 அடி உயர தண்ணீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பட்டத்தின் நூல் அறுந்தது. உடனே பட்டத்தை பிடிப்பதற்காக தண்ணீர் தொட்டியின் மீது ஓடிய ஹரிகரன் கால் தவறி எதிர்பாராத விதமாக தொட்டியில் இருந்து கீழே விழுந்தான். பயங்கர சத்தத்துடன் அலறி கொண்டு தரையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வலியால் உயிருக்கு போராடிய மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிர் இழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்து மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News