குன்னூா் அருகே போக்கு காட்டிய கரடி பிடிபட்டது
- கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
- வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.
ஊட்டி,
குன்னூா் அருகே சேலாஸ் மற்றும் மேல்பாரதிநகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. அது குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்தது.
எனவே அந்த கரடியைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனா்.
இதனை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.இந்நிலையில் ஊருக்குள் பதுங்கி இருந்த கரடி ஒருவழியாக கூண்டில் சிக்கியது.
பின்னா் பிடிபட்ட கரடியை வனத்துறையினா் முதுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா். வனத்துறை போலீசாருக்கு கடந்த 15 நாட்களாக போக்கு காட்டி வந்த கரடி பிடிபட்டதால், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனா்.