மேட்டுப்பாளையம் அருகே புகை மண்டலமாக மாறிய குடியிருப்பு பகுதி
- குப்பைக்கு தீ மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
- இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ளது இடையர்பாளையம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.
சிக்கதாசம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் குவியல் போன்று குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த குப்பைகளுக்கு நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் தீ வைத்து சென்றுள்ளனர். தீ அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்து, அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இடையர்பாளையம் பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக மாறி மக்கள் மூச்சு விடவே சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டம் பற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதிகாரிகள் காலையில் அந்த பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.