உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே 11 பம்ப் செட்களில் மின்வயர்கள் திருடிய கும்பல்

Published On 2022-07-14 13:43 IST   |   Update On 2022-07-14 13:43:00 IST
  • தியாகதுருகம் அருகே 11 பம்ப் செட்களில் மின்வயர்கள் மர்ம கும்பலால் திருடப்பட்டது.
  • திருடு போன ஒயரின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 20,000 என கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) விவசாயி, இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் மின் மோட்டார் அமைத்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.நேற்று காலை மணிகண்டன் தனது வயலுக்குச் சென்று நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பார்த்தபோது மர்ம நபர்கள் மின் மோட்டாரில் இருந்த வயரை வெட்டி திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் விசாரித்த போது இதே போல் சிறுவல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், வெங்கடேசன், தென்னரசு, பாண்டியன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட 9 பேருக்கு சொந்தமான 11 மின் மோட்டாரில் மர்ம நபர்கள் வயரை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடு போன ஒயரின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 20,000 என கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியநல்லூர், முடியனூர் உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் மின் மோட்டாரில் மர்ம நபர்கள் ஒயரைத் திருடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகதுருகம் பகுதியில் தொடர் மின் ஒயர் திருட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News