உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர்-தச்சூர் கூட்டுச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை- மீறினால் ரூ.1000 அபராதம்

Published On 2023-06-11 10:38 GMT   |   Update On 2023-06-11 10:38 GMT
  • வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
  • பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பொன்னேரி:

மீஞ்சூர் பகுதியை சுற்றி காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிமெண்ட் ஆலைகள், பெட்ரோலிய நிறுவனம், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளிட்ட ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வருகின்றன. அவை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் சாலை மற்றும் தச்சூர்-பொன்னேரி- மீஞ்சூர் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, கனரக வாகனங்கள் மீஞ்சூர்- வண்ட லூர் சாலையை பயன்ப டுத்தவும் பொன்னேரிக்குள் நுழையவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை விடுமுறையினால் இந்த விதிமுறை சரியாக பின்பற்றபடாமல் இருந்து வந்ததது.

இந்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மீஞ்சூரில் வாகன விபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்க உள்ளதால் விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. துரை சங்கர் சேகர், நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், டி. எஸ். பி. கிரியா சக்தி, அகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக தச்சூர் கூட்டு சாலைக்கு எந்த கனரக வாகனமும் வரக்கூடாது எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் சாலையின் ஓரங்களில் விளம்பர பேனர் வைக்ககூடாது, சாலையின் ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

இதில் தாசில்தார் செல்வகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News