உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தை பலி

Published On 2022-10-18 09:32 GMT   |   Update On 2022-10-18 09:32 GMT
  • விளையாடி கொண்டிருந்த அமரன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கினான்.
  • வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்பு கம்பி அமைக்கப்படவில்லை.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி செங்கல்மேடு கிராமம் கொடுக்கால்வலி தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம்-ரஞ்சிதா ஆகியோரின் இரண்டரை வயது மகன் அமரன்.

அமரனை நேற்று அவரின் தாய் ரஞ்சிதா அழைத்துக் கொண்டு கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அலுவலக வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அமரன், அலுவலகத்திலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டான்.

தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் சிறுவன் அமரனை அப்பகுதியில் உள்ளவர்கள் வாய்க்காலில் சென்று தேடினர்.

பின்னர் கொள்ளிடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் அமரனின் உடல் மிதந்ததை கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தெற்கு ராஜன் வாய்க்கால் கரையில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அலுவலகம் எதிரே எந்த தடுப்புச் சுவரோ, தடுப்பு கம்பியோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்படவில்லை.

அஞ்சல் அலுவலகம் எதிரே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைத்திருந்தால் கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பாக அமையும்.

எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பு கருதி அஞ்சல் அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News