உள்ளூர் செய்திகள்

ஊர்க்காவல் படை வீரரை கரடி துரத்தியதால் பரபரப்பு

Published On 2023-01-12 11:39 GMT   |   Update On 2023-01-12 11:39 GMT
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

 கோத்தகிரி

 கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் விநாயகர் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவு ஊர்க்காவல் படையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 43) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் கரடி துரத்தியதில் தவறி கீழே விழுந்து கிறிஸ்டோபர் காயமடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

Similar News