உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 4 இடங்களில் 56 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2023-08-08 14:58 IST   |   Update On 2023-08-08 14:58:00 IST
  • ராஜேந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தார்.
  • ராஜேந்திரன் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கோவை.

கோவை பீளமேடு புதூர் திருமகள் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது58). இவர் கடந்த 3-ந் தேதி தனது மனைவியுடன் சொந்த வேலை காரணமாக பெங்களூருவுக்கு சென்றார்.

2 நாட்களுக்கு முன்பு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தார்.

அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிரா ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தாமோதரன் என்பவரை போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.

இதையடுத்து அவரும் சென்று பார்த்து விட்டு வீடு பூட்டி இருப்பதாகவே தெரிவித்தார். இருந்தாலும் சந்தேகம் அடைந்த, ராஜேந்திரன் மறுநாள் புறப்பட்டு கோவைக்கு வந்து விட்டார். வீட்டை திறந்து சென்று உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் உள்ள பின்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார்.

அப்போது அதில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. இவர் வெளி ஊர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணம், நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரரைண நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் குமார்(59). இவரும் சம்பவத்தன்று வீட்டை பூட்டி வெளியில் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகை, மற்றும் 1 லட்சம் ரொக்க பணமும் கொள்ளை போயிருந்தது.

இதேபோல், கோவை கணபதி, எப் சி ஐ ரோடு, பாலு கார்டனை சேர்ந்த பியோ ராபர்ட் (31) என்பவரது வீட்டில் 11.25 பவுன் தங்க நகை திருட்டு போனது. கோவை போத்தநூர் ஜோதி நகரை சேர்ந்த வெங்கட்ரமணி (46) என்பவரது வீட்டில் ரூபாய்.6000 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகர பகுதியில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டில் ஈடுபட்டு வருவதும், ஒரே நாளில் 56.70 சவரன் நகை திருட்டு போய் இருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News