37 இடங்கள் வெள்ள அபாய பகுதிகள்: மீட்பு மற்றும் பாதுகாப்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் - கிருஷ்ணகிரி கலெக்டர் பேட்டி
- 37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
- தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பொது மக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க கூடாது.
கிருஷ்ணகிரி,
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செயதார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு வந்துக்கொண்டிருக்கும் 16,250 கனஅடி தண்ணீர், முழுவதும் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதனால், பெரி யமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி ஆகிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பொது மக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க கூடாது என்றும், கால்நடைகளை நீர்நிலை பகுதிகளுக்கு அழைத்து செல்ல கூடாது.
37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் மூலமாக குழு அமைக்கப்பட்டு அனைத்து தாலுகாவிலும் 37 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறி யாளர்கள் அறிவொளி, காளிபிரியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.