தூத்துக்குடியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 3,496 வழக்குகளுக்கு தீர்வு
- தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
- 3,568 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,496 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டின் முதல் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடியில் 4 அமர்வுகளும், கோவில்பட்டி யில் 2 ஸ்ரீவைகுண்டத்தில் 2 திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள்,வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 306 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 251 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.அதன் மொத்த தீர்வு தொகை ரூ. 6 கோடியே 12 லட்சத்து 73,454.
மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3,262 வழக்குகளில் ரூ.1 கோடி 99 லட்சத்து 27,247 மதிப்புள்ள 3245 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
3,568 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,496 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில்,தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், சார்பு நீதிபதி பீரித்தா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்து லெட்சுமி, பணியாளர்கள் பால் செல்வம், நம்பிராஜன், சத்யா பாண்டி ஆகியோர் செய்திருந்தார்கள்.