நெல்லை மாநகர பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள புதிதாக 300 பேர் நியமனம்- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
- நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
- மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் சரவணன் பேசியதாவது:-
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சீறிய நடவடிக்கையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள 33 அரசு பள்ளிகளில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று குறைகளை தீர்க்கும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள புதிதாக 300 பேர் நியமனம் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும் போது, மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் தி.மு.க. கவுன்சி லர்கள் பழையபேட்டை வாகன முைனயம் அருகில் உள்ள ஆடு அறுக்கும் நிலையத்தை மறுடெண்டர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பேசிய 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் வழக்கம் போல் இந்தாண்டும் அரசு விதிகளை பின்பற்றியே டெண்டர் விடப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கவுன்சிலர்களின் தலையீடு அதிகம் உள்ளதாக குற்றம் சாட்டினார்.