நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க நாளை முதல் 3 நாள் சிறப்பு முகாம்
- பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெறுவோர்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்
- விடுபட்டவர்கள் முகாம் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு 2 கட்டங்களாக விண்ணப்பதிவு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை பெறுவோர், வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகியவை மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நாளை (18-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை நடக்க உள்ளது.
எனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ள மாற்று திறனாளிகளின் குடும்ப தலைவிகள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பதியாதவர்கள் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.