சிறுவாபுரி கோவிலில் 27-ம் ஆண்டு ஸ்ரீ வள்ளி மணவாளன் திருக்கல்யாண மகோத்சவம்
- இன்று காலை ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
- மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், இன்று 27-வது ஆண்டாக திருக்கல்யாண மகோத்சவ விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதன்பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவ மகோத்சவம் நடைபெற்றது.
மதியம் 11.50 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் 15 பேர் கொண்ட வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இதன் பின்னர், மங்கள வாத்தியம் மற்றும் திருக்கயிலாய வாத்தியம் முழங்க சுவாமி ஆறுமுறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் மயிலை சிறுவாபுரி பிரார்த்தனை குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா,துணை தலைவர் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.