உள்ளூர் செய்திகள்
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வீ. கே.புதூர்:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து மஞ்சள் வண்ண துணிப்பையுடன் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அமைந்த பதாகைகளுடன் பேரணியில் பங்கு பெற்றனர். விழிப்புணர்வு பேரணியானது குற்றாலம் ஐந்தருவி புறவழிச்சாலையில் தொடங்கி பாரத் மாண்டிசோரி பள்ளி வழியாக குற்றாலம், செங்கோட்டை, இலஞ்சி சந்திப்பு சாலையில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் மாணவர் ஸ்ரீஜித் மாசுக்கட்டுப்பாடு குறித்து உரையாற்றினார். ஆசிரியர்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் இப்பேரணியில் பங்கேற்றோரைப் பாராட்டினர்.