விழுப்புரம் மாவட்டத்தில் 100 நாள் திட்ட வேலை பணியாளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க கலெக்டர் உத்தரவு
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சி மன்ற அலுவலத்தில், மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் மோகன் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியாளர்களுக்கான ஊதியம் நிலுவையின்றி வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலாளர் பதிவேடுகளை சரியாக பதிவு செய்து வரவேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து திட்டப்பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பதுடன், பணிகள் காலதாமதமின்றி செயல்படும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
குறிப்பாக எந்த ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உரிய காலங்களில் வழங்க வேண்டும். எங்காவது ஊதியம் காலதாமதமாக வழங்குவதாக புகார் வந்தால் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துஉள்ளார்.