உள்ளூர் செய்திகள்
நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்ல அனுமதிக்காததால் விபரீதம்
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார்.
சம்பவத்தன்று இவரது பெற்றோர் கோவில் திருவிழாவுக்காக விருதுநகருக்கு சென்று இருந்தனர். ராஜ்குமார் வீட்டில் தனது அண்ணனிடம் நண்பர்களுடன் படத்துக்கு செல்வதாக கூறினார். ஆனால் அவர் படத்துக்கு செல்லக் கூடாது என கூறிவிட்டார். மேலும் அவர் ராஜ்குமாரை வீட்டிற்கு வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றார்.
தனது அண்ணன் படத்துக்கு செல்ல அனுமதிக்காததால் மிகுந்த மனவேதனை அடைந்த ராஜ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் தனது தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொைல செய்து கொண்ட பிளஸ்-2 மாணவர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.