உள்ளூர் செய்திகள்
மதுரை ஐகோர்ட்

கோவில் திருவிழாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2022-06-03 13:47 IST   |   Update On 2022-06-03 13:47:00 IST
கோவில் திருவிழாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரணை செய்த தனி நீதிபதி, ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்தார். அதில் ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும் போது ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்களை அனுமதிக்ககூடாது என்றும், நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் மனுதாரர் தரப்பில் நாடகங்கள் நடத்துவதற்கு இரவு 8 மணி முதல் 11 மணி வரை நேரம் போதாது. எனவே இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடத்த நேரத்தை நீட்டித்து தர அனுமதி வழங்க வேண்டும் என 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன், விஜயகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரவில் நாடகங்கள் நடத்த உள்ளதால் நேரத்தை அதிகரித்து அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்ட நீதிபதி இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு கோவில் திருவிழா குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News