உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சத்தியமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-05-31 06:55 GMT   |   Update On 2022-05-31 06:55 GMT
சத்தியமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் அழகிரிகாலனி பகுதியை சேர்ந்தவர் ரகு. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சவிதா (23). கடந்த 2015-ம் ஆண்டு சவிதா வெங்கடாசலம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள ரோஜா நகரில் சவிதா கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் நேற்று ரகுவின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட வெங்கடாசலம் உங்கள் மகள் சவிதா தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் சவிதா வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகள் மூச்சுப் பேச்சில்லாமல் இறந்த நிலையில் சோபாவில் படுக்கவைக்கப்பட்டு இருந்தார்.

வீட்டில் உள்ள படுக்கை அறையில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சவிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சவிதாவின் தந்தை ரகு தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News