உள்ளூர் செய்திகள்
ஆத்திரம் அடைந்த அமிர்தராஜ் தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போதுவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
கோவை:
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் அமிர்த ராஜ் (வயது 33). எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர் பிரசவத்துக்காக தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.
சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அமிர்தராஜ் தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போதுவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா தனது கணவரின் நண்பரான கணேசபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் உடனடியாக அமிர்தராஜின் வீட்டிற்கு விரைந்து சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது அமிர்தராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட அமிர்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.