உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதி கேட்டு மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
துர்கா காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மேயரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பரங்குன்றம்,
தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நல்வாழ்வு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை மதுரை துர்கா காலனியில் இன்று நடந்தது.
மண்டலத் தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார் இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே இந்தப்பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறை பல ஆண்டுக ளாக பூட்டி கிடப்பதாகவும், அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதி சரிவர இல்லை.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி மேயரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதானம் பேசி கோரி க்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.