உள்ளூர் செய்திகள்
நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் குடம்
இரும்புதலை பகுதியில் நாயின் தலையில் பிளாஸ்டிக் குடம் சிக்கியதால் உணவு உட்கொள்ள முடியாமல் அந்த நாய் உயிருக்கு போராடி வருகிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பகுதியில் தெருநாய் ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது.
அப்போது அந்த நாய் தண்ணீர் குடிக்க அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் வைத்திருந்த பிளாஷ்டிக் குடத்திற்குள் தலையை விட்டது.
தலையை மீண்டும் எடுக்க முடியாமல் போகவே நாய் பயந்து போய் அங்கும், இங்கும் ஓடி மோதி கொண்டதில் குடத்தின் அடிபாகம் உடைந்து போனது.
ஆனால் குடத்தின் மேல்பாகம் நாயின் கழுத்தில் வசமாக மாட்டி கொண்டதால் அதனால் கழட்ட முடியவில்லை. இதனால் தலையில் குடம் மாட்டிய நிலையில் பல நாட்களாக சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது.
இதனால் அந்த நாயால் உணவு சாப்பிட கூட முடியாமல் அங்கும் இங்கும் சுற்றியபடி திரிந்து உயிருக்கு போராடி வருகிறது. கிராமத்தினர் சிலர் தலையில் சிக்கிய குடத்தை அகற்ற முயற்சித்தும் நாய் நிற்காமல் ஓடிவிடுவதாக கூறுகின்றனர்.
ரோட்டில் செல்லும் வாகனத்தில் அடிபட்டு இறந்து போய் விடுமோ என பயத்தில் இருப்பதாக கிராம மக்கள் கூறினர்.
உடனடியாக வனவிலங்கு பாதுகாப்புதுறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணியினர் எப்படியாவது நாயின் கழுத்தில் சிக்கிய பிளாஷ்டிக் குடத்தை அகற்றி நாயின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.