உள்ளூர் செய்திகள்
ஓட்டல் அதிபர் உடலை மலை அடிவாரத்தில் இருந்து டோலி கட்டி தூக்கி சென்ற காட்சி

வாணியம்பாடி நெக்னாமலையில் சாலை வசதி இல்லாததால் ஓட்டல் அதிபர் உடலை 8 கி. மீ டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

Published On 2022-05-23 17:40 IST   |   Update On 2022-05-23 17:40:00 IST
50 ஆண்டாக சாலை வசதி இல்லாததால் அங்குள்ள கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சிகிச்சைக்கு சென்று வர சிரமமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டல் அதிபர் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே நெக்னாமலை உள்ளது.

சுமார் 2 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலை பகுதியில் கிராம மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த மலை பகுதிக்கு செல்ல சரியான சாலை வசதிஇல்லை. சுமார் 50 ஆண்டுக்கு மேலாக இந்த அவல நிலை உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது50) என்பவர் பெங்களுரில் ஓட்டல் நடத்தி வந்தார்.

அவர் அங்கு இறந்து விட்டார். அவரது உடலை சொந்த ஊரான நெக்னாமலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அவரது உடலை பெங்களுரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நெக்னாமலையின் அடிவார பகுதியான கொத்தகோட்டை பகுதிக்கு இன்று 10.15 மணிக்கு கொண்டு வந்தனர்.

அதற்கு மேல் சாலை வசதி இல்லாததால் உடலை வாகனத்தில் கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து அவரது உடலை டோலி கட்டி தூக்கி சென்றனர்.

சுமார் 8 கி.மீ தூரம் அவர்கள் உடலை டோலியில் சுமந்தவாறு சென்றனர். சுமார் 1 மணியளவில் மலை கிராமத்திற்கு சென்றனர்.

50 ஆண்டாக சாலை வசதி இல்லாததால் அங்குள்ள கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சிகிச்சைக்கு சென்று வர சிரமமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டல் அதிபர் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News