உள்ளூர் செய்திகள்
காய மடைந்தவர்களை ஓசூர் எம்.எல்.ஏ, மாநகர மேயர் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

ஓசூரில், மினி பஸ் கவிழ்ந்து விபத்து: காயமடைந்த பெண்களுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆறுதல்

Published On 2022-05-23 09:59 GMT   |   Update On 2022-05-23 09:59 GMT
ஓசூரில், மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பெண்களுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆறுதல் கூறினர்.
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று அரசுத்துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது. இதனை, உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், வேலை இல்லாத பட்டதாரிகள், பெண்கள், ஆண்கள் என 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் வாய்ப்பு முகாமிற்கு ஏராளமானோர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் வேலைவாய்ப்பு முகாம் முடிந்த பின்னர் அதே வாகனத்தில் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த வகையில் ஊத்தங்கரை அருகே உள்ள சாம்பல்பட்டி, குமாரபட்டி, நாடலப்பள்ளி, பசலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்து இருந்தனர். முகாம் முடிந்ததும் அனைவரும் மினி பஸ்சில் ஊருக்கு திரும்பினர். 

அப்போது ஓசூர் ரிங் ரோடில் சீதாராம் நகர் பகுதியில் பஸ் அதிவேகமாக சென்று, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 வயது சிறுமி உள்பட 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காய மடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். 
மேலும், அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறு, டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News