உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாவூர்சத்திரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உடல் நசுங்கி பலி

Published On 2022-05-23 07:46 GMT   |   Update On 2022-05-23 07:46 GMT
பாவூர்சத்திரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீ.கே.புதூர்:

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை சேர்ந்தவர் செல்வ விநாயகம். இவரது மகன் விக்னேஷ் பாண்டியன் (வயது 28). கூலி தொழிலாளி. இவரும் தென்காசி  திரவியம் நகரை சேர்ந்த மெக்கானிக்கான விக்னேஷ் என்பவரும் நண்பர்கள்.

விக்னேஷ் பாண்டியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று இவர்கள் 2 பேரும் அந்த நாய்க்குட்டியை பாவூர்சத்திரத்தில் தனது நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். விக்னேஷ்  மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

பாவூர்சத்திரம்  ராமச்சந்திரபட்டினம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நாய்க்குட்டி துள்ளி சாலையில் குதித்துள்ளது. உடனே விக்னேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னால் அமர்ந்திருந்த விக்னேஷ் பாண்டியன் சாலையை கடந்து நாய்க்குட்டியை தூக்குவதற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கிய விக்னேஷ் பாண்டியன் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் விக்னேஷ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News