கடலூர் தேவனாம்பட்டினத்தில் காலி இடத்தில் குப்பை கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்த பொது மக்கள்
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் துப்புரவு ஊழியர்கள் மூலம் குப்பைகள் அந்தந்த பகுதியில் அகற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது கம்மியம்பேட்டை மற்றும் கடலூர் முதுநகர் பகுதியில் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருவதால் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் கெடிலம் ஆறு கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு தீவிரமாக இடம் பார்க்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்து காலியிடம் இருந்து வந்தன. இதனை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முட்புதர்கள் முழுவதும் அகற்றப்பட்டு சுத்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் மாநகராட்சி பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு டிராக்டர் மூலமாக அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு சென்றன. அப்போது அதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து திடீரென்று வாகனத்தை சிறை பிடித்து வெளியில் விடாமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது? இங்கு யாரும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம். இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மாநகராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றன.