உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே கோடை சிறப்பு மலை ரெயில்

Published On 2022-05-20 16:43 IST   |   Update On 2022-05-20 17:06:00 IST
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை:
 
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.

காடுகளின் நடுவே இந்த ரெயிலில் பயணிக்கும்போது, இயற்கை எழில் காட்சிகளை கண்டு களிக்கலாம் என்பதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35க்கு மேட்டுப்பாளையம் வருகிறது.

ஊட்டியில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதாலும், விடுமுறை விடப்பட்டதாலும் மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

இதை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 16-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்படுகிறது.இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை மாதம் 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரெயில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.

ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1,210, 2-ம் வகுப்பு ரூ.815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ.1,575, 2-ம் வகுப்பு ரூ.1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடங்கியுள்ளது. சிறப்பு மலைரெயில் சேவை தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News