பூந்தமல்லி நகராட்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
பூந்தமல்லி:
பருவமழை தொடங்குவதற்குள் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக மழைநீர் கால்வாய்கள், நீர்நிலைகளை தூர்வாறும் பணிகளும், புதிய மழை நீர் கால்வாய்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பூந்தமல்லி பைபாஸ் சாலை, புதுத்தெரு உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டு வரும் மழை நீர் கால்வாய் பணிகள் மற்றும் அம்மான் நகரில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமானப்பணிகளையும் நகர்மன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
அப்போது கால்வாயின் தரம், நிலை, அளவு, பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை குறித்து அவர் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நகர்மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதரன், ஆணையர் நாராயணன், தி. மு.க. நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, மாவட்டப் பிரதிநிதி சுதாகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.