திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதியோர் பராமரிப்பு மையம் - சிகிச்சை, ஆலோசனை வழங்க ஏற்பாடு
திருப்பூர்:
திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், முதியோர் பராமரிப்புக்கென பிரத்யேக மையம் துவங்கப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவசர சிகிச்சை, பிரசவம் மட்டுமின்றி, ஆதரவற்ற முதியோர், உற்றார் உறவினர் இல்லாதவர்களை கொண்டு வந்து விடும் காப்பகமாக, தலைமை அரசு மருத்துவமனை மாறிவிட்டது. மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வயதானவர்களை அழைத்து வந்து சிலர் விட்டு சென்று விடுகின்றனர்.
இவர்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாக படுத்துறங்கி, உணவு அளிப்பவர்களிடம் சாப்பிட்டு காலத்தை ஓட்டி வருகின்றனர்.இவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தலைமை அரசு மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென பிரத்யேக மையம் துவங்கப்பட்டுள்ளது.
தினமும் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை இம்மையம் செயல்படும். டாக்டர், செவிலியர் பணியில் இருப்பர். மருத்துவ ஆலோசனை பெறலாம். அவசியம் இருந்தால் மட்டும் வார்டில் அனுமதிக்கப்படுவர். இல்லையெனில், அன்று மாலையே மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவர்.