உள்ளூர் செய்திகள்
காரைக்குடி நகராட்சி பூங்காவை திறக்க கோரிக்கை
காரைக்குடி நகராட்சி நவீன பூங்காவை திறக்க தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
காரைக்குடி
கொரோனா காலத்தில் நோய்த்தொற்றை தவிர்க்கும் நடவடிக்கையாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பூங்காக்களை மூடுவதை வலியுறுத்தியதால் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்கா கடந்த 3 வருடங்களாக செயல்படாமல் மூடப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திவிட்டதால் பல்வேறு பூங்காக்கள் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
காரைக்குடி நகராட்சியின் இந்த நவீன பூங்கா மட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றது. காரைக்குடி நகராட்சியில் உள்ள நவீன பூங்கா இது ஒன்றுதான். மக்கள் விடுமுறை நாட்களிலும் மாலை நேரங்களிலும் பொழுதுபோக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இந்த நவீன பூங்காவை சுத்தம் செய்து பல்வேறு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்ற நிர்வாகம் மற்றும் தலைவர் முத்துதுரையிடம் காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.