உள்ளூர் செய்திகள்
ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பால பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் முன்னிலையில் மேம்பாலம் நடைபெறும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதமாக முடிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மின்சாரத்துறை மூலமாக மின் கம்பத்தை அகற்றி தருமாறும்,நகராட்சி நிர்வாகம் மூலமாக மரங்களை அகற்றி தருமாறும் மேம்பால பணி ஒப்பந்ததாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து இருதுறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் பணி நிறைவடைய ஒத்துழைப்பு தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
மேலும் மேம்பால பணிகள் இன்னும் 5 மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி பரிசாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
அதிகாரிகளை முடுக்கிவிட்டு மேம்பால பணிகளை துரிதப்படுத்திய தங்கபாண்டியன் எம்.எல். ஏ.வின் நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்வில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.