உள்ளூர் செய்திகள்
கொலை

கோயம்பேடு பஸ்நிலையத்தில் மதுபோதை தகராறில் காவலாளி அடித்துக்கொலை

Published On 2022-05-18 06:23 GMT   |   Update On 2022-05-18 06:23 GMT
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47). கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 12-ந்தேதி இரவு பஸ் நிலைய வளாகத்தில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். பஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தங்கதுரை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தங்கதுரையின் பின் தலையில் காயம் இருந்ததால் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த தங்கதுரைக்கும் மர்மநபர் ஒருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது பதிவாகி உள்ளது. ஆத்திரமடைந்த மர்மநபர் தங்கதுரையை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதில் தலையில் அடிபட்ட தங்கதுரை இறந்து போனார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பி ஓடிய மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News