உள்ளூர் செய்திகள்
மன்னவனூரில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் மேல்மலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் உள்ளூர் மக்கள் தவிப்பு

Published On 2022-05-17 06:03 GMT   |   Update On 2022-05-17 06:03 GMT
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் உள்ளூர் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்
கொடைக்கானல் :
கொடைக்கானலில் தற்போது சீசன் களைகட்டி வருவதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானல் நகரை சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் மேல்மலை பகுதியான மன்னவனூர், சூழல்சுற்றுலா மையத்திற்கு வருகின்றனர். இப்பகுதி முழுவதும் பசுமையான வயல்வெளிகள் மற்றும் அருவிகள் இருப்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி செல்கின்றனர்.

ஆனால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வாகனநெருக்கடியில் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மன்னவனூர் கைகாட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணிகள் தடுப்பூசி போடுவதற்கு வருகின்றனர். மேலும் பிறந்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாகனங்கள் நெருக்கடியால் அவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. முன்கூட்டியே இதனை தடுக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மற்றும் மேல்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கேரட் அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில் தொடர் மழையால் கேரட் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

கேரட்டை சுத்தம் செய்யும் எந்திரம், இகோ அலுவலகத்திற்கு எதிரில் செயல்படுகிறது. அப்பகுதிக்கும் செல்ல முடியாமல் வாகன நெருக்கடியால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அடுத்த வாரம் சீசன் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களை நியமித்து வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News