உள்ளூர் செய்திகள்
சிவகங்கை அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கழுங்குப்பட்டியில் உள்ள ஏரிக்கண்மாய் சுமார் 227 ஏக்கர் உள்பரப்பளவும், 383 நீர்ப்பாசன ஆயக்கட்டு தாரர்கள் பயன்பெறும் வகையிலும், 3 டிஎம்சி தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு உள்ள பெரிய கண்மாய் ஆகும்.
இந்த கண்மாய்க்கு நீர்வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, ஏறக்காழ மலை, அழகர்கோவில் மலை, பூதகுடிமலை போன்ற மலைகளில் இருந்து பருவகாலங்களில் பெய்யப்படும் மழைநீர் ஏரிக்கண்மாய்க்கு வருவது வழக்கமாக இருந்து வருகி றது.
இந்த கண்மாய் தண்ணீர் வரத்து பாதை சீமை கருவேல மரங்களால் முற்றிலுமாக தண்ணீர் வரத்து பாதை தடை பட்டு இருந்து வந்தநிலையில் முன்னாள் கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்ற ஆண்டு பெய்த பலத்த மழையால் இந்த ஏரிக்கண்மாய் நிரம்பி வழிந்தது.
அதேபோன்று இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரண மாக, ஏரிக்கண்மாய் தன்னு டைய முழு கொள்ளளவை எட்டிய காரணத்தினால் இருபோக விவசாயத்தை இந்தப்பகுதியில் உள்ள ஆயக்கட்டுதாரர்கள் மேற்கொண்டனர்.
தற்சமயம் முற்றிலுமாக விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த வேண்டும் என ஊர் மக்கள் சார்பாக முடிவெடுக்கப்பட்டு இன்று அதிகாலை மீன்பிடி திருவிழா நடந்தது.
மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, நெற்குப்பை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்று கட்லா, ரோகு, ஜிலேபி, சிசி, விரால் போன்ற பலதரப்பட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
கச்சா, ஊத்தா, கொசுவலை, முதலிய சாதனங்களைக் கொண்டு நபர் ஒருவர் சுமார் 3 கிலோவில் இருந்து 5 கிலோவரை மீன்களை பிடித்தனர்.
மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதால் வரும் காலங்களில் விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.