உள்ளூர் செய்திகள்
தக்காளி

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது- தக்காளி கிலோ ரூ.70 ஆக அதிகரிப்பு

Published On 2022-05-11 08:35 GMT   |   Update On 2022-05-11 08:35 GMT
“அசானி” புயல் காரணமாக ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

போரூர்:

கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 42 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50க்கு விற்ற தக்காளி விலை மேலும் அதிகரித்து இன்று ரூ.70க்கு விற்கப்படுகிறது.

மார்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.55க்கு விற்கப்பட்டது. அதேபோல் மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:

கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 42 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.550க்கு விற்ற தக்காளி பெட்டி இன்று ரூ.700க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ததால் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது.

தற்போது “அசானி” புயல் காரணமாக ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News