உள்ளூர் செய்திகள்
சோளிங்கரில் வீதி உலா வந்த கோவில் தேர் விமானம் உடைந்து ஒருவர் படுகாயம்
சோளிங்கரில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா வீதி உலா வந்த கோவில் தேர் விமானம் உடைந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. பிரம்மோற்சவம் தொடங்கி 5-ம் நாளான நேற்று பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மங்கல வாத்தியங்களுடன் சுவாமி கோவில் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு ஹேமகோடி விமானத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.
நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுதோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
மாடவீதி உலா நிறைவுப்பெற்று தேர் சன்னதிக்கு திரும்பியது. அப்போது அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் கேபிள் ஒயரில் ஹேமகோடி விமானம் மாட்டிக் கொண்டு வாகனம் உடைந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார்.
கோவில் உதவி ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.அப்போது அய்யங்கார்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்துக்கு காரணம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் விபத்துக்கு முழு பொறுப்பு கோவில் நிர்வாகம் மட்டுமே என்று அய்யங்கார்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சுவாமி கோவில் பிரகாரத்தில் கொண்டுவந்தனர். பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டது.