உள்ளூர் செய்திகள்
பஸ்களை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ராணிப்பேட்டையில் இருந்து 9 புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கம்

Published On 2022-05-04 09:55 GMT   |   Update On 2022-05-04 09:55 GMT
ராணிப்பேட்டையில் இருந்து 9 புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் போக்குவரத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்திலிருந்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 9 புதிய வழித்தட மற்றும் தடை நீட்டிப்பு செய்யப்படும் பஸ்களை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொது மேலாளர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய வழித்தட பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அனைத்து துறைகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வரும் மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த புதிய வழித்தடம் மற்றும் வழிபட நீட்டிப்பு பஸ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மக்கள் கேட்டவுடனே அதனை ஆராய்ந்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற நியாயமான கோரிக்கைகளை வைக்க வேண்டும். அப்போதுதான் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு மக்கள் பயன்பெறுவார்கள். 

தலங்கை முதல் ஆற்காடு வரை புதிய பஸ் வழித்தடம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார். 

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி பேரூந்து பாகாலா - சென்னை, வாலாஜா - பெங்களூர், ஆற்காடு- கோவிந்தசேரி குப்பம், ஆற்காடு - சீயாம்பாடி, ஆற்காடு- மேல்வல்லம், சோளிங்கர் - நெமிலி, ஆற்காடு-சோளிங்கர், ஆற்காடு- துர்கம், அரக்கோணம் - சோளிங்கர் வழி பரவத்தூர் ஆகிய புதிய வழித்தட பஸ்கள் இயக்கப்படுகிறது. 

நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் ஹரினி, ஒன்றிக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்ற துணை தலைவர்கள் ரமேஷ்கர்ணா, கமலராகவன், தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் ரமேஷ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

முடிவில் தமிழ்நாடு போக்குவரத்து கழக துணை மேலாளர் பொண்ணு பாண்டி நன்றி கூறினார்.
Tags:    

Similar News