உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வாலிபர்
டி.என்.பாளையம் அருகே மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர் காந்தி வீதியை சேர்ந்தவர் வசந்த் (23). கடந்த 9-ந்தேதி வாணிப்புத்தூர் ராமர்கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் நடந்து உள்ளது.
அப்போது கோபி நஞ்சகவுண்டன் பாளையம் பாரியூர் ரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான நந்தகுமார் (24) திருவிழாவில் தனது மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
திருவிழாவிற்கு வந்த வசந்த் இதை தட்டி கேட்ட போது நந்தகுமார் தகாத வார்த்தைகளால் வசந்தை திட்டியுள்ளார், அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து கடந்த 12-ந்தேதி வசந்த் தனது வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார், அன்று இரவு 11.30 மணியளவில் வீட்டின் வெளியே பெட்ரோல் வாடை வீசியதால் வசந்த் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது, இதையடுத்து வசந்த் விசாரித்ததில் நந்தகுமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வசந்த், நந்தகுமாரிடம் தனது மோட்டார் சைக்கிளை எதற்காக எரித்தாய் எனவும், புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித்தர கேட்டபோது உனது மோட்டார் சைக்கிளை எரித்தது போல் உன்னையும் எரித்து விடுவேன் என்று நந்தகுமார், வசந்த்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து முன்தினம் வசந்த், நந்தகுமார் மீது பங்களாப்புதூர் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து நந்தகுமார் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.