முதியோர், மாற்றுத்திறனாளிகள் சுற்றிப்பார்க்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் பேட்டரி கார் வசதி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் சிறந்த சுற்றுலாதலமாக திகழ்கிறது. பசுமை பாரம்பரியம் என்ற திட்டத்தின் கீழ் 3.76 கோடி ரூபாய் மதிப்பில் மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பசுமை பாரம்பரிய மேம்பாட்டு திட்டத்தை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் சுற்றுலா வரும் முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் நடந்து சென்று புராதன சின்னங்களை பார்ப்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர்களின் வசதிக்காக, பெண்களே இயக்கும் மூன்று பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக இந்த பேட்டரி வாகனங்கள் கடற்கரை கோவில் வளாகத்தில் செயல்படுகிறது. வரும் நாட்களில் மற்ற இடங்களிலும் பேட்டரி வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பேட்டரி வாகனம் இயக்கத்துக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் மகேஸ்வரி, சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, திட்ட செயலர்கள் தபாசிஷ் நியோகி, கல்பனா சங்கர், இஸ்மாயில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் கலந்து கொண்டனர்.