உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் வைக்கப்பட்டுள்ள சோழர் கால கல்வெட்டு தமிழ் விளக்க போர்டு

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கல்வெட்டு எழுத்துக்கள் தமிழில் மொழிபெயர்த்து வைப்பு- சுற்றுலா பயணிகள் வரவேற்பு

Published On 2022-04-27 06:19 GMT   |   Update On 2022-04-27 06:25 GMT
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் முதல் முறையாக அங்குள்ள கல்வெட்டுகளில் இருக்கும் பழங்கால சோழர் காலத்து தமிழ் கல்வெட்டு எழுத்துக்களின் அர்த்தங்களை மொழி பெயர்த்து, தமிழில் விளக்க போர்டுகளை மத்திய தொல்லியல் துறை வைத்துள்ளது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் ஏராளமான கல்வெட்டு எழுத்துக்கள் உள்ளன.

தற்போதைய தமிழ் எழுத்துக்கள் போல் இல்லாததால் கல்வெட்டுக்களில் எழுதி இருப்பது என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் கல்வெட்டு பற்றிய குறிப்புகளும் புராதன சின்னங்கள் அருகே வைக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் எதுவும் தெரியாமல் பார்த்து செல்லும் நிலையே நீடித்து வருகிறது.

மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் கூறுவதையும் அவர்கள் விற்கும் விளக்க புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி படித்தும், மட்டுமே தெரிந்து கொண்டு சிற்பங்களை பார்த்து ரசித்து வந்தனர்.

எனவே கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றிய குறிப்புகளை அனைவரும் அறியும் வகையில் குறிப்புகள் வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். வடமாநிலங்களில் உள்ள புராதன சின்னங்கள் பகுதியில் வைத்திருக்கும் விளக்க தகவல் போர்டுகள் போன்று தமிழ்நாட்டில் உள்ள புராதன சின்னங்கள் பகுதியிலும் ஏன் போர்டுகள் வைக்கவில்லை? என்று சிற்பக்கலை ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் முதல் முறையாக அங்குள்ள கல்வெட்டுகளில் இருக்கும் பழங்கால சோழர் காலத்து தமிழ் கல்வெட்டு எழுத்துக்களின் அர்த்தங்களை மொழி பெயர்த்து, தமிழில் விளக்க போர்டுகளை மத்திய தொல்லியல் துறை வைத்துள்ளது.

இதேபோல் ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்கள் பகுதியிலும் விளக்க தகவல் போர்டுகள் வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News